தானியேலின் வாழ்க்கையும், சிறப்பும் மேன்மையும் எதிர்ப்பை ஈர்க்கும் என்பதை தெளிவாக காட்டுகிறது. தானியேலுக்கு இருந்த ஞானம், மதிப்பு இவைகளை தாங்க முடியாத எதிர்ப்பாளர்கள் தானியேலின் நேர்மையை மறைத்து அவரை அழிக்கும் சட்டரீதியான சதிவலையை பின்னினார்கள். ஆனால் தானியேல் கலங்கவில்லை; தன்னை நியாயப்படுத்தவும் இல்லை. அவர் வழக்கம்போல் தன் மூன்று வேளை ஜெபத்தைத் தொடர்ந்தார். உண்மையான வைராக்கியம் நெருக்கடி நேரத்தில் தான் புலப்படுகிறது.
அவர் தண்டிக்கப்படும்படி போடப்பட்ட சிங்கங்களின் குகை, தேவ வல்லமையை வெளிப்படுத்தும் மேடையாக மாறியது. தானியேலின் வைராக்கிய ஜெபம் தேவதூதரின் பாதுகாப்பை வரவழைத்தது; அவரது வைராக்கிய விசுவாசம் பதட்டத்தை அமைதியாக மாற்றியது. சிங்க குகையில் தானியேலை போட்ட ராஜா இரவில் ஓய்வின்றி தூக்கமிழந்து இருந்தாலும், தானியேலோ சிங்கத்தின் குகையில் அமைதியாக, சமாதானமாக இருந்தார். சிங்கங்கள் பசித்திருந்தாலும், அவை தானியேலைத் தொட முடியாதபடி அடக்கப்பட்டன.
இதிலிருந்து நாம் கற்கும் உண்மை: நீங்கள் தேவனை மறுக்காதவரை, தேவனும் உங்களை ஒருபோதும் மறுக்கமாட்டார்.
ஜெபம் உங்கள் பழக்கமாக இருந்தால், எந்த சதியும் உங்களை மேற்க்கொள்ளாது. நேர்மை உங்கள் கவசமாக இருந்தால், பொறாமை உங்களை ஒரு போதும் வீழ்த்தாது. தானியேல் போடப்பட்ட சிங்க குகை, அவரை அழிக்காமல், அவரை மென்மேலும் உயர்த்தும் ஆசீர்வாதமாக மாறியது.
“தெய்வத்தின் முன்னிலையில் முழங்கால் படியிட்டு தொழுபவன், எந்த சிங்கத்திற்கும் முன்னும் திடமாக நிற்பான்.” - அறியப்படாத ஒருவர்.
by சாம்சன் பால்
Read More""பிரச்சினை மிகப்பெரியதாக இருக்கலாம். இருக்கட்டும். ஆனால், நாம் இங்கு தனியாக அல்ல. நாமும் தேவனுமாக இந்தப் பிரச்சினைகளுக்கு முன்பாக நிற்க முடியும். நாமும் தேவனுமாக இந்தச் சோதனைகளைத் தைரியமாகச் சந்தித்து கடந்து போக முடியும். ""
— 64
கர்த்தாவே!, தானியேலின் தைரியத்தை எனக்குத் தாரும். ஜெபத்தில் நிலைத்து, குணத்தில் நேர்மையாயிருந்து, சோதனைகளில் உறுதியாக இருக்க உதவிடும். சிங்கங்களின் வாயையும் மூடி என்னைக் காப்பீராக. ஆமென்.
உங்களுக்கு எதிரான ஒவ்வொரு சதியும் மகிமையான சாட்சியாக மாறட்டும்.
உங்கள் விசுவாசத்தின் முன் ஒவ்வொரு சிங்கமும் மௌனமாகட்டும்.